திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
1
வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.
2
பொய்தொ ழாது புரியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைகெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.
3
துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
4
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.
5
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
6
பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.
7
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே.
8
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
9
பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
10
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.20 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.
1
வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
2
இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.
3
வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
4
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
5
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
6
தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.
7
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
8
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
9
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com